மனிதர்களின் ஆளுமைகளை பலவாறாக வகுத்து விளக்குகிறது நவீன உளவியல். ஆயுர்வேதத்தில் சத்வ காயம், ராஜச காயம், தாமச காயம் என மூன்று குணங்களை ஒட்டி ஆளுமை கூறுகளை விளக்குகிறது. பெரும்பாலான ஆளுமை கோளாறுகள் உருவாவதற்கான வாய்ப்புகள் (personality disorders) இளம் வயதிலேயே தீர்மானிக்கப் படுகிறது. ஆழ்மன ஏக்கங்களும் துக்கங்களும் மேலெழும் தருணங்களில் அவர்கள் முற்றிலும் வேறு மனிதர்களாக ஆகிவிடுகின்றனர். பேய் பிடிப்பது போன்றவைகளை நாம் இப்படித்தான் புரிந்துகொள்ள முடியும். இதை ஒருவகையான வடிகால் என்றும் பார்க்கலாம். ஆகவே அவர்களின் தீர்ப்பதற்கு சாத்தியமான ஏக்கங்களை சமன் செய்வதன் மூலம் அந்த பிளவுபட்ட ஆளுமையின் தேவையை நாம் இல்லாமல் ஆக்குகிறோம். படையல்களை அப்படி புரிந்துகொள்ளலாம். ஆபத்தானவர்களை தனிமைபடுத்துவது (பிறர் நன்மையை கருத்தில் கொண்டு) எனும் பழக்கம் அன்று முதல் இன்று வரை தொடர்கிறது. இத்தகு வியாதிகளில் கையாளப்படும் வன்முறை சார்ந்த வழிமுறைகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. ஏற்புடையதும் அல்ல.எனினும் நவீன உளவியல் மனதின் ஒரு சித்திரத்தை அளிக்கிறது என்றால் ஆயுர்வேதம் அதே மனதை மாற்று கோணங்களில் அணுகுகிறது. மன சிக்கல்களுக்கு வெறும் மயக்க மருந்துகள் மட்டுமே தீர்வு அல்ல என்பதையும் நாம் கணக்கில் கொண்டாக வேண்டும்.