சென்ற பதிவில் ஷாலக்கிய பிரிவின் முக்கியத்துவத்தை பற்றி எழுதியதன் தொடர்ச்சியே இந்த பதிவில் இடம்பெறுகிறது. ஷாலக்கிய பிரிவின் முக்கியமான மருத்துவர் என்று ஜனகரையும் நிமியையும் போற்றுகிறது ஆயுர்வேதம். நிமி எனும் அரசன் ஜனகனின் குலத்தில் அவனுக்கு முன்னரே தோன்றியவன். நிமி உடலை விட்டு கண்ணிமையில் புகுந்து கொண்டார். தேகம் இல்லாதவன் என்பதே விதேஹம் என்று ஆனது. விதேக தேசம் அப்படி உருவானது தான். விதேக தேசத்து பெண் என்பதால் சீதைக்கு வைதேகி என்றொரு பெயர் உண்டு. கண்ணிமையில் உள்ள நிமியின் காரணமாகவே கண் சிமிட்ட முடிகிறது என்றொரு தொன்மம் உண்டு. அப்படி சிமிட்டும் செயலை தான் நிமிஷா என்றழைக்கிறோம். அதுவே மருவி நிமிடம் என்றாகிவிட்டது.