மெய்யியல் சிந்தனை முறைமைகளில் இந்தியத்தன்மை என்று ஏதும் உண்டா? சுழற்சி, முடிவிலி, பன்மையை ஏற்றுகொள்வது, ஒன்றே பலவாக பரினமிப்பது - போன்ற கருத்துக்களை இந்தியத்தன்மையுடன் பொருத்திக் கொள்ளலாம். ஆயுர்வேதத்தைப் பற்றி சொல்லும் போது தொடக்கமும் ஒடுக்கமும் இல்லாத அழிவற்ற அறிவு என்று சரகர் குறிப்பிடுகிறார். இது வழமையாக நம் மரபில் எல்லாவற்றைப் பற்றியும் சொல்லப்படுவது தான் என்பதாலோ என்னவோ அதைப்பற்றி அதிகம் யாரும் அலட்டிக்கொள்வதில்லை.
ஆயுர்வேதத்தை மாற்று கோணங்களில் அணுகும் ஒரு நூலை உருவாக்க வேண்டும் எனும் யோசனை சில மாதங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது எனக்கு, அதன் ஒரு பகுதியாக ஆயுர்வேத நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ள தொன்மக் கதைகளை தொகுக்கத் தொடங்கினேன். தொன்மங்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப் பட்டுள்ளன? அவைகளுக்குள் ஏதேனும் பொதுத்தன்மை இருக்கிறதா? குறியீட்டு ரீதியாக பொருள் விளக்கிக் கொள்ள இயலுமா போன்ற கேள்விகளை மனதில் கொண்டு இத்தேடலில் இறங்கினேன்.