காலம் வழிந்தோடி தீர்ந்து மறையும் தருணத்தில் நம் முன் வந்து நிற்பவன் தான் காலன். வாழ்வின் அத்தனை மகத்துவங்களும் ஒரு நாள் முடிவுர வேண்டும். அறிய முடியாத வாழ்வின் அடுத்த பக்கமாக வரும் மரணத்தை மனிதன் என்றேனும் வாசித்து தான் ஆக வேண்டும், இயற்கையுடன் போரிட்டு மரணத்தை வெல்வதல்ல ஆயுர்வேதத்தின் நோக்கம். வாழும் காலத்தில் வீடுபேறு நோக்கி முன்னகர்ந்து ஆன்மாவின் அழியா தன்மையை உணர்ந்து அறிவதே அதன் நோக்கம். தர்ம அர்த்த காம மோக்ஷம் எனும் நான்கு புருஷார்தங்களை அடைவதற்கு ஆரோக்கியம் அவசியம் என்கிறார் சரகர்.அதற்கு தேவையான ஆரோக்கியத்தை பேணும் வழிமுறைகளை சொல்வதே ஆயுர்வேதத்தின் நோக்கம் என்கிறார். முதிர்ந்த வயதில் பலவீனமான உடலை உகுத்து வேறோர் உடலில் புகுந்து ஜனன மரண சுழலில் உழல்கிறது நம் ஆன்மா என்கிறது கீதை. பசி, நீர் வேட்கை, தூக்கம், வயோதிகம் ஆகியவை மனிதன் தவிர்க்க முடியாத பிணி என்கிறது ஆயுர்வேதம்.